மரணதண்டனை,கை கால் வெட்டுதல் மீண்டும் அமுல் - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை மற்றும் கை கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறைத்துறை பொறுப்பாளர் முல்லா நூருதீன் துராபி கூறியதாவது,
எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதை போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும். மரண தண்டனைகள், கை-கால்களை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்புகளை துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமானது. 1990-ம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன. இந்த தடவை பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம்.
முன்பு பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது தேவை இல்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று எவரும் எங்களுக்கு சொல்லத்தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னைய தலிபான்கள் ஆட்சியின்போது நிதித்துறை அமைச்சராக இருந்த துராபி, இசையை கேட்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினார்.
காபூல் விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட மிக கடுமையான செயலுக்காக ஐ.நா.வின் தடைப் பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.