கனடாவில் இனவழிப்பு நினைவகம் : அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட புதிய தகவல்
தனது வாக்கு வேட்டைக்காகவே கனடாவின் பிரம்டன் மேயர் இனவழிப்பு நினைவகத்தை அமைத்துள்ளார். அப்பகுதியில் அதிகளவான இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். தேர்தல் கால வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2021 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய செயற்பாடு
பிரம்டன் பகுதியில் இனவழிப்பு தொடர்பான நினைவகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை 2021 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடா வெளிவிவகார அமைச்சருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியிலும் இது விடயத்தில் மீண்டும் தலையிட்டோம். தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தோம். எனினும், அந்நாட்டு சட்டத்தின் பிரகாரமே அதனை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இனவழிப்பு வாரத்துக்கு எதிராக தடை உத்தரவு பெறுவதற்கு கனடாவிலுள்ள அமைப்பொன்று நீதிமன்றத்தை நாடியிருந்தாலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிழையான கருத்தாகும்
எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நினைவகம் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான கருத்தாகும்
விடுதலை புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, வேறொரு அமைப்பின் பெயரில்தான் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிராக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்தோம்.
கனடாவின் புதிய அரசாங்கத்திடமும் தூதுவர் ஊடாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.” – என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த நினைவகம் அமைப்பு தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவரை அழைத்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
