சுமந்திரனாலேயே தமிழரசு கட்சி சின்னாபின்னமாகும் - ஆருடம் கூறிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுப்படும் என பிரான்ஸ் மனித உரிமைகள் இல்லத்தினுடைய இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி கிருபாகரன் தெரிவித்திருந்தார்.
இவ்விடையத்தை அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“சுமந்திரனுக்கு 2009 இற்கு முன்னர் அரசியலும் தெரியாது விடுதலைப்புலிகள் போராட்டம் தொடர்பிலும் தெரியாது. இந்நிலையில் புதிதாக அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியை உடைத்தது தான்.
சுமந்திரன் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்

இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரன் முக்கியத்துவம் பெற்றார். சுமந்திரன்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் நினைத்த வேலைகளை செய்தார். தனது விருப்பத்திற்கமையவே வேட்பாளர்களை தீர்மானித்திருந்தார்.
தான் விரும்பும் அமைச்சு பதவிகளை பெறுவதற்கு மூன்றில் இரண்டு கேட்டார். மேலும் தேர்தலில் தமிழ் தேசியத்திற்கோ, தமிழ் கூட்டமைப்பிற்கோ எந்த சம்பந்தமும் இல்லாத தலைவர்களை சுமந்திரன் வேட்பாளராக முன்னிறுத்தினார்.(2020 நாடாளுமன்ற பொது தேர்தலில்) இதேவேளை மாவை சேனாதிராஜா போன்றோர் கட்சியை ஒருநிலைப்படுத்த முயற்சிக்கும் போது சுமந்திரன் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
இந்த செயற்பாடுகளின் உள்நோக்கத்தை நான் இப்போதே சொல்கிறேன். அவர் இந்த தேர்தலில்(2020 நாடாளுமன்ற பொது தேர்தல்) வெற்றி பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிரியும் சில வேலை தமிழரசுக் கட்சிகளும் பிரிய வாய்ப்பு உள்ளது.
ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், அவர் இந்த தேர்தலில் களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் அனைவரும் அவருக்கு சார்பாக இருக்க கூடியவர்கள் தான். எனவே சுமந்திரன் இந்த தேர்தலில்(2020 நாடாளுமன்ற பொது தேர்தல்) வெற்றி பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிரிவது நிச்சியம்”என கூறியிருந்தார்.
அண்மைய அரசியல் செயற்பாடு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனித உரிமை செயற்பாட்டாளர் ச.வி கிருபாகரன் இந்த விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதற்கமைவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது பிளவுப்பட்டுள்ளது.
இந்த பிளவானது தமிழர் தாயக பகுதிகளில் காணப்படும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை மற்றும் மக்களுக்கான சேவைகள் என்பனவற்றில் காணப்படும் விரிசல் நிலையை எடுத்து காட்டுகின்றது. அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த, தமிழரசுக் கட்சி,ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் தற்போது பிளவுப்பட்டு,தமிழரசுக் கட்சி தனியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என ஐந்து கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணியாகவும் உருவாக்கியுள்ளது.

இதேவேளை தமிழரசுக் கட்சிக்குள்ளும் தற்போது ஓர் பிளவு ஏற்பட்டுள்ளமையை அண்மைய அரசியல் செயற்பாடுகள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது. அதாவது இரு சார்பு கொள்கை ஊடாக, சுமந்திரனுக்கு முரணான ஒரு எதிர் நிலைப்பாட்டில் சிறீதரன் இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் கட்சியினுடைய நிலை

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியது இதனால் சிறுபான்மை மக்களுக்கு தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.
இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன.
இதன் விளைவாக எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது.
மூத்த தமிழ் கட்சியினுடைய நிலை

இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழர்களின் உரிமை மட்டும் அல்லாது சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் போராடிய மூத்த தமிழ் கட்சியினுடைய நிலை சீர்குலைந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழரசு கட்சி
நோக்கம் : ஐக்கிய இலங்கை இணைப்பாட்சியின் அங்கமாக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின்படி ஒரு சுயாட்சித் தமிழரசும், ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவி இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல், பொருளாதார, கலாசார விடுதலையைக் காண்பதே இக்கட்சியின் நோக்கமாகும்.
குறிப்பு : தமிழர் தாயகத்தில் அமையும் தன்னாட்சி அரசில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் அவர்களுடைய மத, மொழி உரிமைகளுக்கும் பூரணமான உத்தரவாதம் அளிக்கப்படும்.
ஆனால் தற்போது தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களது உரிமைகளுக்காய் குரல் கொடுக்கவேண்டிய பிரதிநிதிகள், தமது சொந்த விவகாரங்களை கட்சிக்குள் உட்புகுத்தி கட்சியையும் தமிழர்களினுடைய ஒருங்கிணைந்த உரிமை குரலையும் நிலைகுலைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எழுச்சி பேரணி

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் கடந்த நான்காம் திகதி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி பேரணியானது கடந்த செவ்வாய்கிழமை(07) மட்டக்களப்பில் நிறைவு பெற்றது.
இந்த எழுச்சி பேரணியில் அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள், பொது மக்கள் என பல தரப்பினர் கலந்துக்கொண்ட போதிலும் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

இதேவேளை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசு கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களுள் ஒருவரான சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அந்நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.
சிறீதரன் அணி

இதேவேளை இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளிலும் தனிநபர் ஆதிக்கத்தாலும் அதிருப்தி கொண்ட, தமிழ் தேசியத்தின் பால் பற்றுள்ள பலர் ஓரணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு வெளிப்பாடாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அணியின் ஆதரவின் வெளிப்பாடு இருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக தமிழரசுக் கட்சிக்குள்ளும் தற்போது ஓர் பிளவு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய ஒட்டுமொத்த அரசியல் நிலைப்பாடுகள்,கட்சிகளுக்கிடையிலான பிளவுகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கிருபாகரன் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.