இலங்கைக்கு சுருக்கு கயிறாக தமிழ் மக்கள்
இலங்கையில் தமது அரசியல் நலனை அடைவதற்கு அரசு ஒத்துழைக்காதபோது வெளித்தரப்புகள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒரு சுருக்கு கயிறாக பாவிக்கின்றன. சுருக்கில் இருந்து வெளிவர இலங்கை அரசு தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டியதில்லை என்பதை அறியும். மாறாக சுருக்கை விரித்த வெளி சக்திகளோடு இணக்கத்திற்கு போகின்றன. இணக்கத்திற்கு தமது பேரத்தையும் முன்வைக்கின்றன. தமக்கான இலாபத்தையும் அடைகின்றன. தமிழ் மக்கள் நட்டாற்றில் கைவிடப்படுகின்றனர்.
இந்த நச்சு பொறிக்கு தமிழ் தலைமைகள் உடந்தையாகின்றனர் என அண்மைய அரசியல் விவகாரம் பற்றி விபரித்திருக்கிறார் குணா கவியழகன் (Kuṇā kaviyaḻakaṉ).
GSP என்பது Generalised System of Preferences என்பதன் சுருக்கம். ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமை. இவ்வுரிமை வழங்கப்பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய GSP+சலுகையைப் பெறுவதற்கென சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். இது அரசியலோடு தொடர்புடையது. அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானவை. இவ் உடன்படிக்கை சட்டம், இனஒற்றுமை, தனி மனிதஉரிமைகள், சமஉரிமை உட்பட பலஅம்சங்களைக்கொண்டது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்க்கும் (G.L. Peiris) இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் இலங்கை நிலவரம் தொடர்பாக அவர்கள் திருப்தி தெரிவித்துள்ளதாக அரச தரப்பு கூறியிருக்கிறது.
பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவிக்கிறார். இலங்கையில் மனிதஉரிமைநிலவரம் பாதிக்கப்படுவதற்கு காரணம் பயங்கரவாத தடைச்சட்டமாகும்.
அதனால் இலங்கைக்கான வரிச் சலுகை நிறுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அதை ஆராயவே இப்போது குழு வருகை தந்தது. ஆனால் சந்திப்பில் உடன்படிக்கையில் உள்ள மனித உரிமைநிலவரம் பற்றி கலந்துரையாடப்படவில்லை. பேரத்தின் அடிப்படையில் நிகழும் உடன்பாடே இணக்க அரசியல் ஆகும். இதில் முக்கியமானது யாரை யார் அதிகளவு நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தமுடியும் என்பதாகும். நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தினால் மட்டுமே பேரத்தில் வெற்றி பெறமுடியும். இலங்கையும் இவ்வாறுதான் பேரத்தை உருவாக்குகிறது.
தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மனித உரிமைமீறலாகவும், ஜனநாயக தோல்வியாகவும் காண்பித்து இலங்கை அரசியலையும், பொருளாதாரத்தையும் பணியவைத்து மேற்குலக கூட்டு ஓர் உடன்பாட்டினை இப்போதைக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இவ்வாறான பேர அரசியல் மூலம் மேற்குலகத்தினர் வெற்றியடைந்துள்ளனர்.
மேற்கு இந்தியக்கூட்டிற்கு இலங்கை அரசு ஓர் அனுசரித்துப் போகும் உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளது, இதனால் உள்ளார்ந்த உடன்படிக்கைகள் இடம்பெற்றுள்ளன. எனவே கருவியாக கையாளப்படும் தமிழர்களின் பிரச்சனையை தமிழர்கள் ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி பேர அடிப்படையில் இணக்க அரசியலை முன்னெடுக்க வேண்டுமே அன்றி பேரம் வைக்காது நம்பிக்கையின் அடிப்படையில் சென்றால் அது சரணாகதி அரசியலே தவிர இணக்க அரசியல் அடிப்படை கொண்டதல்ல .
இதில் வெற்றிபெறவும் முடியாது. எனவே இணக்க அரசியலுக்கும் மூலோபாயம் வேண்டும். அதனை வகுத்து இராஜதந்திரஅணுகுமுறையில் செல்லவேண்டும். இல்லாதுவிடின் இரத்தமும் கண்ணீரும் மட்டுமே எமக்கானதாகும். என தனது வலை ஒளிப் பதிவில் கருத்து வெளியிட்டுளார் குணா கவியழகன் (Kuṇā kaviyaḻakaṉ).