தமிழ் மக்களின் கையொப்பங்கள் ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிப்பு
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் மக்களிடம் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன.
இன்று செவ்வாய் (23-09-2025)மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கையளிக்கப்பட்ட கடித வரைவு
இக்கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம். சந்திரகுமார் , கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரன் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐநா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தில் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் செ. கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,முருகேசு சந்திரகுமார் மற்றும் எஸ். நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர்.
விரைந்து நிலைநாட்டப்பட வேண்டிய தமிழ் மக்களுக்கான நீதி
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்தவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனை, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை நேரடியாகவும் ஐநா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இச்சந்திப்பு கையெழுத்து ஆவணங்களையும் கடிதப் பிரதியையும் கையளித்ததுடன் முடிவு பெற்றது.

பருத்தித்துறைக்கு வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி : பட்டாசு கொளுத்திய இளைஞன் காவல்துறையால் கைது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
