இலங்கையின் நெருக்கடிக்கு தமிழ் அரசியல் கட்சிகளே காரணம் - ரணில் தரப்பு குற்றச்சாட்டு
வடக்கிலும் கிழக்கிலும் மொழி மற்றும் மதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதே , இலங்கை இன்று எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணியென ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே முடியுமென கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று (19) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் கட்சி அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணிலின் நிலைப்பாடு

" இலங்கையை 2048 ஆம் ஆண்டாகும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்பதே சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம்.
இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக ஒரே நாட்டில் வாழ வேண்டுமென்பதே எமது கட்சித் தலைவரின் கொள்கையாகும்.
ஒரு தாயின் பிள்ளைகளைப் போல

கடந்த 1944 ஆம் ஆண்டு ஒரு கட்சியாக நாட்டில் ஆட்சி இடம்பெற்ற வேளை இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கவில்லை. எனினும், 1956 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன மற்றும் மத ரீதியில் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்தே நாட்டில் பிளவுகள் ஏற்படத் தொடங்கின.
இதனால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கநேரிட்டது. இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீண்டும் 1944 ஆம் ஆண்டில் இருந்த ஆட்சி நடத்தப்பட வேண்டும்.
அனைத்தும் ஆரம்பிக்கப்பட்ட இடத்துக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தக்கூடிய சிறந்த தலைவர் எமக்கு இருக்கிறார்.
இந்த நிலையில், இனம், மதம், ஜாதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பிரியாது அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவருடன் பயணிக்க வேண்டும். ஒரு தாயின் பிள்ளைகளை போல வாழ வேண்டும்." என அவர் மேலும் தெரிவித்தார்.