விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டாலும் அவர்களின் ஈழக்கனவுடன் பலர் இன்றும் போராடி வருவதாக ஸ்ரீலங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவிற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்வதற்கு அரசியல்வாதிகள் என எவர் முயற்சித்தாலும் பதவி தராதரம் பாராமல் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றன என்கிற பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதன்போது வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைப்பற்றப்படட தற்கொலை அங்கிகள் சார்ந்த புதிய தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாகும் முயற்சிகளைத் தடுக்கின்ற எமது முயற்சிகளை ஒருபோதும் கைவிடவில்லை. அதேபோல், விடுதலைப்புலிகள் மற்றும் புலம்பெயர் சக்திகள், தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் நிச்சயமாக தமிழீழக் கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை. நாங்கள் இப்போது புலியின் வாலை மாத்திரமே அழித்திருக்கின்றோம். ஆனால் அதன் தலை மற்றும் ஏனைய பாகங்கள் வெளிநாடுகளில் தான் செயற்படுகின்றன.
கனடா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் அவர்கள் இருக்கின்றார்கள். புலம்பெயர் பிரிவினைவாதக் குழுக்கள் தனிநாட்டுக் கோரிக்கையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட புறம்பான நாடொன்றையே கோருவதோடு ஒற்றையாட்சியை நிராகரித்து வருகின்றனர். தீவிரவாதத்தையும், பிரிவினவாதத்தையும் நோக்கி இவர்கள் செல்கின்றார்களா என்றே அவதானித்து வருகிறோம்.
ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்கின்றவர்கள் எவராக இருப்பினும் பதவி, தராதரம் பாராமல் அவர்களைக் கைது செய்து சட்டநடவடிக்கை எடுப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தீவிரவாத மற்றும் பிரிவினைவாத குழுக்கள் மிகப்பெரிய வலையமைப்பாக உள்ள படியினால் புலனாய்வுப் பிரிவினர் செயற்பாட்டில் இருக்கின்றார்கள். நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது முக்கியம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் அதன் பின்னணியைத் தேடித்திரியாமல் அதற்கு முன்னதாகவே அவர்களின் இலக்குகள், ஆயுத விநியோகம் என்பவற்றை கண்டுபிடிக்க வேண்டும். ஐ.எஸ். என்பது ஒரு தீவிரவாத அமைப்பு.
அதன் அடையாளமே இஸ்லாமிய தேசம் என்பதாகும். அதுபோலவே தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஓர் அடையாளம், இலக்கு ஈழமாகும். அதனை தடுப்பதற்காகவே புலனாய்வுப் பிரிவினர் செயற்படுகின்றனர். யார் இவர்களுக்கு பணம் கொடுப்பது, ஊக்குவிப்பது என்பது குறித்த பல தகவல்களை எமது புலனாய்வுப் பிரிவினர் திரட்டியிருக்கின்றனர். நேற்று முன்தினம் கூட சிலரை கைது செய்திருக்கின்றோம்.
செட்டிக்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் சார்ந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக சந்தேக நபர்களின் தொலைபேசி ஊடாக யாருக்கு பேசியுள்ளனர் என்று விசாரணை இடம்பெறுகிறது. கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கிகள் பழைமைவாய்ந்தது. புதியதல்ல. இருப்பினும் விசாரணையின் பின்னரே முடிவு தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.