சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்
சர்வதேச அழுத்தங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு அவசரமாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் சங்கீத்சனுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவர் ஆளும்கட்சி உறுப்பினருக்கு நன்றி தெரிவித்திருக்கலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழ் செய்திப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்குச் சென்ற இளங்குமரன்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருக்கின்ற விடயத்தை சாதாரண சட்டத்திற்குள் மாற்றி அந்த பிணையை வழங்க வேண்டிய நிலைமைக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலைமை இருக்கின்ற போது இதில் அரசியல் இலாபம் தேடிக்கொள்வதற்காக அநுரவினுடைய ஒரு முகவராக செயற்படுகின்ற இளங்குமரன் நீதிமன்றத்திற்குச் சென்று தான் தான் அவரைப் பிணையில் எடுத்ததைப் போன்ற ஒரு போலி தோற்றத்தைக் காட்டுவதற்கு முயற்சி செய்கின்றார்.
சிறையிலே மிக மோசமான சூழலுக்குள் வைக்கப்பட்ட சங்கீத்சனுக்கு காவல்துறை விசாரணைகளின் போது சொல்லப்பட்ட அச்சுறுத்துகின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவர் அச்சமடைந்துள்ள நிலையில் இளங்குமரன் தான் தன்னை மீட்டதென்று நம்பி அவருக்கு நன்றி சொல்கின்றார். அது அவருடைய அறியாமையினால் அவர் கூறுகின்ற கருத்தாக தான் நான் பார்க்கின்றேன்.
சர்வதேச நெருக்கடி
என்னைப் பொறுத்தவரையில் சங்கீத்சனின் கைதுக்கு, நீதிக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்ட அத்தனைக்கும் இளங்குமரனும் அவரோடு சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.

அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இந்த விடுதலையை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |