பரிஸில் காவல்துறை துப்பாக்கிசூட்டில் பலியான ஈழத்தமிழருக்கு அமைதிப் பேரணி
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப்பகுதியான பொபினியில் கடந்த மாத இறுதியில் மனப்பிறழ்வுக்கு உள்ளாகியிருந்த ஈழத்தமிழர் ஒருவர் பிரெஞ்சு காவல்துறையின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிப்படையான விசாரணையை கோரியும் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தியும் நாளை (14) பிற்பகல் ஒரு மணிக்கு ஒரு அமைதிப்பேரணி நடத்தப்படவுள்ளது.
பொபினி ஹெக்டர் - பெர்லியோஸ் வீதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதான வைத்திலிங்கம் புவனேஸ்வரன் உயிரிழந்தார்.
துப்பாக்கிப் பிரயோகம்
இலங்கையில் வன்னி மல்லாவியைச் சேர்ந்த இவர் மனப்பிறழ்வுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தனது கைகளில் கத்திகளை வைத்திருந்தால் அவரை மிக ஆபத்தானவராக கருதிய காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தனர்.

காவல்துறையினர் விடுத்த முன்னெச்சரிக்கைகளை புறந்தள்ளிய புவனேஸ்வரன் காவல்துறையினரை நோக்கி முன்னகர முனைந்தபோது தமது அதிகாரிகளில் ஒருவர் அவர் மீது இரண்டு முறை சுடநேர்ந்தால் படுகாயமடைந்த அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டபோதிலும் அவை பலனளிக்காமல் அவர் மரணித்திருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த வைத்திலிங்கம் புவனேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியும் நாளை பொபினி நகராட்சியின் முன்றலில் பிராங்கோ தமிழ் சமூகம் ஒரு அமைதிப்பேரணியை நடத்தவுள்ளது.
பிரான்ஸின் தேசிய காவல்துறை
வெள்ளை பேரணி என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இந்த பேரணியில் பங்கேற்றுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து பிரான்ஸின் தேசிய காவல்துறையின் பொது ஆய்வகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சின் சட்டத்தின்படி, ஒரு காவல்துறை அதிகாரி தனது பணிக்கு வழங்கபபட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் போதெல்லாம், அவற்றை காவல்துறையின் உள்விவகாரப் பிரிவு விசாரணை செய்யும் வழக்கத்தின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் பொபினி அரச சட்டத்தரணிகள் பணியகம் இரண்டு விசாரணைகளை நடத்திவரும் நிலையில் இந்த பேரணி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |