போராட்டத்திற்கான தொனிப்பொருளாக மாறியுள்ள தேசிய பாதுகாப்பு - சிறிலங்கா டெலிகொம்
சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் '101கதா' கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட, இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை தொடர்பில் விமர்சித்திருந்தார்.
அத்துடன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை, கற்பனைகளை மையமாகக் கொண்டு காணப்படுவதாக அவர் விமர்சனம் முன்வைத்துள்ளதுடன், தேசிய பாதுகாப்பு என்ற சொல்லை அவர்கள் போராட்டத்திற்கான தொனிப்பொருளாக மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்காலம் பற்றிய தெளிவு
துறைசார் நிபுணர்களிடத்தில் ஆலோசிக்காமல் இவ்வாறானதொரு அறிக்கையை தயாரித்துள்ளமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் நியதிகளுக்கு புறம்பானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிகழ்காலம் பற்றிய தெரிவு மற்றும் எதிர்காலம் பற்றிய நோக்கு என்பவை இல்லாமையே இவ்வாறான பிரச்சனைகளுக்கு முதன்மை காரணமாகும்.
யுத்த காலத்திலும் 4 கையடக்க தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களும், 3 நிலையான தொலைபேசி இணைப்பு நிறுவனங்களும் காணப்பட்டன.
அவற்றில் டயலொக் நிறுனத்தில் மாத்திரமே இலங்கையர் ஒருவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காணப்பட்டார்.
இருப்பினும் அந்த நிறுவனம் முழுமையாக மலேசியாவிற்கு சொந்தமாக இருந்தது.
இவ்வாறிருக்க சிலர் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை மந்திரம் போல கூறிக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.
அரசாங்கத்தின் உரிமம்
மேலும், டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை அரசாங்கம் முழுமையாக கொண்டிருந்த போது கொழும்பு லோட்டஸ் வீதியில் காணப்பட்ட தலைமையகத்திலிருந்தே அனைத்து சர்வதேச அழைப்புக்களும் பரிமாற்றப்பட்டன.
அந்த செயன்முறைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிறிலங்கா சர்வதேச நாடுகளிடத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இவ்வாறானதொரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ குறிப்பிட்டுள்ளார்.
