ஹட்டனில் பீதியை கிளப்பிய பயணப்பொதி - உடன்விரைந்த காவல்துறை வெளியிட்ட தகவல்
சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் ஹட்டன் பேருந்து நிலையத்தில் இன்று (18) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் நிறுத்தி வைக்குமிடப் பகுதியில் உரிமையாளர் இல்லாத நிலையில் கிடந்த பயணப்பொதியால் இந்தப் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
பீதியை கிளப்பிய பயணப்பொதி
நீண்ட நேரமாக குறித்த பயணப்பொதி அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது.
பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் ஹட்டன் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசமாக மாற்றினர்.
காவல்துறை வெளியிட்ட தகவல்
அதையடுத்து, வெடிபொருட்களை தேடும் பணியில் ஈடுபடும் காவல்துறை நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்ததில், பயணி ஒருவர் குறித்த பயணப்பொதியை விட்டுச் சென்றுள்ளதாகவும், குறித்த பயணப்பொதியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பயணப்பொதியை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹட்டன் நகரம் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடதக்கது.
