அமெரிக்காவில் பயங்கரம் - கிறிஸ்துமஸ் ஊர்வலத்துக்குள் திடீரென புகுந்தது கார்- ஐவரின் உயிர் பறிபோனது
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார், கிறிஸ்துமஸ் ஊர்வலத்துக்குள் புகுந்ததால் 5 பேர் உயிரிழந்தனர்.
வாக்கிஷா நகரில் "நன்றி தெரிவித்தல் நாளை" முன்னிட்டு ஆடல், பாடலுடன் நடைபெற்ற ஊர்வலத்தில் பெரியவர்களுடன், பேன்சி டிரெஸ் அணிந்திருந்த சிறுவர், சிறுமிகளும் பங்கேற்றனர்.
அப்போது அவ்வழியாக 65 கிலோமீட்டர் வேகத்தில் வந்த சிவப்பு நிற எஸ்.யு.வி ரக கார், ஊர்வலம் சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடியதை கண்ட காவல்துறையினர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காரை நிறுத்தாமல் செலுத்திய ஓட்டுநர் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை மோதி தள்ளிவிட்டு மாயமானார்.
இந்த கோர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளனர்.