நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் உறுப்பினர்களுக்கு ரபிட் அன்டிஜன் சோதனை!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை ஒன்றை நாளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த என்டிஜன் பரிசோதனையில் நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ள முடியும்.
நாடாளுமன்றம் நாளை கூடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வசதியாகவே நாளைய தினம் இந்த பரிசோதனை நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
அத்துடன் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந்த பரிசோதனை நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நாடாளுமன்றத்தின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த என்டிஜன் பரிசோதனையில் விருப்பமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்திருக்கின்றார்.
அன்டிஜன் பரிசோதனை நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை 9.30மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற இருக்கின்றது.
நாடாளுமன்றத்தின் சுகாதார பாதுகாப்புக்காக இவ்வாறான என்டிஜன் பரிசோதனை கட்டம் ஒன்றை செயற்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பாராளுமன்ற பிரதானிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கின்றனர்.
அதன் பிரகாரமே இந்த என்டிஜன் பரிசோதனை நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்று.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் என 50இற்கும் அதிகமானவர்கள் கடந்த காலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது