பாதாள உலக கொலையாளிக்கு பின்னால் ஆயுதக் கும்பல்: இராணுவத்தினர் தொடர்பில் அதிர்ச்சி!
காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் நியோமால் ரங்கஜீவ கொலை முயற்சி உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘லொக்கு பெட்டீ’, இராணுவத்தின் விசேட அதிரடிப்படையிலிருந்து தப்பியோடிய முன்னாள் வீரர்களைப் பயன்படுத்தி ஒரு புதிய ஆயுதக் கும்பலை உருவாக்கி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
லொக்கு பெட்டீயின் போதைப்பொருள் கடத்தலின் போது ஈட்டப்பட்ட 33 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கந்தர பிரதேசத்திலுள்ள பூசாரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் லொக்கு பெட்டீயின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் தலைவராக பணியாற்றிய, இராணுவ விசேட அதிரடிப்படையில் பணியாற்றி தப்பியோடிய ஒருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் இராணுவ வீரர்கள்
இராணுவத்தை விட்டு வெளியேறிய தனக்குத் தெரிந்த சுமார் 15 வீரர்களை லொக்கு பெட்டீயின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புபடுத்தியதாக சந்தேகநபர் மேலும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லொக்கு பெட்டீ சர்வதேச காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணையின் பேரில் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு மே 04 ஆம் திகதியன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து தனது போதைப்பொருள் வலையமைப்பையும் குற்றவியல் கும்பல்களையும் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |