இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
ஒரு விடுதலைப்போராட்டத்தின் கொரில்லாப் போராளிகளின் இருப்புக்கு இயற்கைக் காடுகளின் வகிபாகம் எந்தளவிற்கு அவசியம் என்பதற்கு மணலாற்றுக்காடுகள் விடுதலைப்புலிகள்ளுக்கு வழங்கிய அடைக்கலம் பேரடையாளம் ஆகிறது. ஈழப் புலிப் போராளிகளின் களமாடலும் அவர்கள் சிந்திய குருதிகளின் சுவடுகளும் அந்த நிலத்தில் ஆழ நனைத்திருக்கின்றன. ஈழத் தமிழ் மக்கள் தமது தாயக நிலத்தை மீட்கும் ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு மணலாறு வரலாற்றின்மீது ஒரு சாட்சியாக இருக்கிறது.
தடை வலயம்
1984 மார்ச் 21ஆம் நாள் மணலாற்றில் நடைபெற்ற பெரு ஆக்கிரமிப்புச் சம்பவம் இலங்கையின் இனவியல் வரலாற்றில் மிகுந்த வலியுடன் நினைவுகொள்ளப்படுகிறது. அந்த நாளில் இலங்கை அரசு மணலாறுப் பகுதியை “தடைவலயமாக” அறிவித்து, அங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியது. இந்தச் சம்பவம் வெறும் வலிந்த இடம்பெயர்வு நடவடிக்கையாக மாத்திரமின்றி ஒரு பூர்வீக இனத்தின் வாழ்வாதாரம், நில உரிமை மற்றும் இன அடையாளத்தை அபகரித்த ஒரு அநீதியாக நிகழ்த்தப்பட்டது.
மணலாறு என்பது புலிகளின் நிர்வாகத்தில் ஒரு தனி மாவட்டம். இது வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வளமான நிலப்பரப்பு. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றை நம்பி வாழ்ந்த பூர்வக் குடிகளான தமிழர் சமூகங்கள் இப்பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் 1980களின் ஆரம்பத்தில் அரசியல் மற்றும் இராணுவ நிலைமைகள் தீவிரமடைந்தபோது, பேரினவாதத்தின் இலக்காக மாறியது. இதன் தொடர்ச்சியாக 1984 மார்ச் மாதத்தில் இந்தப் பகுதி தடைவலயமாக அறிவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு உச்சப்படுத்தப்பட்டது.
விரட்டப்பட்ட தமிழர்கள்
சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அக் காலப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட சிங்கள வன்முறைகள் காரணமாக வாழ்ந்த தமிழர்கள் திடீரென வெளியேற்றப்பட்டனர். மக்கள் தங்கள் வீடுகள், நிலங்கள், விவசாயப் பயிர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு பாதுகாப்புக்காக இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர். இப்படித் தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு மணலாற்றுப் பகுதியை சிங்களப் பகுதியாக்குவதே அன்றைய ஆட்சியாளர்களினதும் பேரினவாதிகளின் நோக்கம்.
இந்த நிலையில் தமிழர் கிராமங்களின் நிலப்பரப்புகளில் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த குடியேற்றங்கள் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டன; அதனுடன் இணைந்து புதிய பாசனத் திட்டங்கள், வீதி வசதிகள், மற்றும் அரச உதவிகள் என்பன அரசால் வழங்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் விஸ்தரிக்கப்பட்டது.
வெலியோயா பெயர் மாற்றம்
அதேசமயம், தமிழர் நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் வகையிலும் சிங்களக் குடியெற்றங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டன. இது அந்தப் பகுதியின் மக்கள் தொகை அமைப்பை மட்டுமின்றி, அதன் நாளந்தோறும் வாழ்வியல் சூழலையும் மாற்றியது. மேலும், பெரும் அநீதியாகவும் ஆக்கிரமிப்பாகவும் மணலாறு என்ற பாரம்பரிய தமிழ் பெயர் நீக்கப்பட்டு ‘வெலியோயா’ போன்ற சிங்களப் பெயர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டதும், அப் பெயரில் தனிப் பிரதேச செயலாகம் உருவாக்கப்பட்டதும் இலங்கை அரசு ஆக்கிரமிப்பின் வழியாக ஈழ இனத்தை அதிகாரபூர்வாக ஒடுக்கியதன் வெளிப்பாடாகும்.
அத்துடன் கிராமங்கள், வீதிகள், மற்றும் நிர்வாகப் பிரிவுகளுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டது. இது அந்தப் பகுதியின் பாரம்பரிய அடையாளத்தை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடாக நிகழ்த்தப்பட்டது. இப்படியாகச் சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவமயமாக்கல் மற்றும் சிங்களப் பெயர்மாற்றம் ஆகியவை ஒன்றிணைந்து, மணலாற்றின் வரலாற்று நினைவுகளையும் இன அடையாளத்தையும் திரிவுபடுத்தும் செயலாக நிகழ்த்தப்பட்டது. நிலம் என்பது வெறும் வாழ்வின் ஆதாரம் மட்டுமல்ல, ஒரு இனத்தின் அடையாளம், வரலாறு மற்றும் உரிமையும்தான். அந்த நிலத்திலிருந்து வேரறுக்கப்பட்ட அனுபவம், ஈழத் தமிழர்களின் அரசியல் சிந்தனையையும் எதிர்ப்புப் போக்கையும் வலுப்படுத்தியது.
ஆயுதம் ஏந்திய போராளிகள்
மணலாறு ஆக்கிரமிப்பும் இலங்கையில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்திற்க அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகியது. மக்கள் அனுபவித்த அநீதி உணர்வு, அரசின் மீதான நம்பிக்கையின்மை, மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை இளைஞர்களை ஆயுங்களைப் பற்றிப் பிடிக்கும் நிலைக்குத் தள்ளியது. இந்த நிகழ்வை ஒரு தனித்த சம்பவமாகப் பார்க்காது இலங்கையின் நீண்டகால இனமோதல் வரலாற்றின் ஒரு பகுதியாகப் புரிந்துகொள்ளும்போது அன்றைய ஈழ இளைஞர்களின் விடுதலைக் கனவின் திரட்சியைப் புரிந்துகொள்ளலாம்.
மணலாறு பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள், 1984இல் ஏற்பட்ட இடம்பெயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அநீதி உணர்வுகளின் பின்னணியில் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். குடும்பங்களை இழந்தது, நிலங்களை இழந்தது, வாழ் நிலம் குறித்து ஏற்பட்ட காதல் என்பவற்றின் விளைவாக, பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தங்கள் நிலம் மற்றும் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடினர். மணலாறு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகள் பின்னர் முக்கியமான இராணுவ மோதல் வலயங்களாக மாறியபோது, அப்பகுதியைச் சேர்ந்த போராளிகள் பல முக்கியப் போராட்டங்களிலும் பங்கேற்றனர்.
மணலாறு வீரர்கள்
வரலாறு முழுவதும் மணலாறு போராளிகள் பெரும் வகிபங்கபளை ஈழப் போராட்டத்தில் செலுத்தினர். 1990களின் தொடக்கத்தில், குறிப்பாக 1992இல், அடர்ந்த காட்டுப்பகுதியான மணலாற்றில் வேவு மற்றும் கரந்தடிப் போர்முறைகளில் திறம்படச் செயல்பட்டனர். மணலாறு பகுதிக்குள் இலங்கை இராணுவ ஊடுருவலைத் தடுத்தல், இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் மற்றும் இப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தமை என்பன ஈழப் போரில் வலிய தகவல்கள்.
1992இல் மணலாற்றை பாதுகாக்க லெப். கேணல் பரிபாலினி போன்ற பெண் போராளிகள் தலைமையிலான புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. அத்துடனக் 1995இல் மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் ஐந்து படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், முந்திரிகைக்குளம் இராணுவ முகாமை இலக்கு வைத்த செயல்பாடுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஈழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தளபதியாக விளங்குகிற பிரிக்கேடியர் பால்ராஜ் (கொக்குத்தொடுவாய்) போன்றவர்கள் மணலாறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
உண்மையில் ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும்தான் ஒரு விடுதலைப் போராட்டத்தை உருவாக்குகிறது. இந்த நாளை நாம் இன்றும் நினைவுகொள்ள வேண்டியுள்ளது. இன்னமும் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள், நில உரிமை மீட்பு, மற்றும் நீதியுடன் கூடிய சமரசம் சாத்தியமற்ற நிலையில் இன்னமும் எங்கள் நிலத்தில் தையிட்டி எனக் கொல்லைப் புறம்வரையில் ஆக்கிரமிப்பு நீள்கின்ற நிலையில் நாம் இழந்த ஒரு நிலத்தின் வரலாறும் நினைவும் ஒடுக்கப்பட்ட ஈழ இனத்தை நடுங்கவும் இயங்கவும் செய்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 21 March, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.