மீன் பிடிக்க சென்று முதலையிடம் சிக்கிய பெண்! தேடுதல் பணிகள் தீவிரம்
புதிய இணைப்பு
அம்பாறை - சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்று காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (14) மாலை மீன் பிடிக்கச் சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற நிலையில் இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்பதற்காக சவளக்கடை காவல்துறையினருடன் இணைந்து கல்முனை கடற்படையினரின் படகும், சுழியோடிகளும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (14) அம்பாறை (Ampara) மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வன பரிபாலன சபை
இச்சம்பவத்தில் சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே முதலை இவ்வாறு இழுத்துச் சென்றுள்ளதுடன் இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது .
காரைதீவு (Karaitivu) – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள், சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |