உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும்! சிறிநேசன் வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தற்கொலை குண்டுதாரிகளே பிரதான சூத்திரதாரிகள் எனக்கூறி, தண்டனையிலிருந்து சந்தேக நபர்களை காப்பாற்றவே உதய கம்மன் பில முயற்சிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று (17.04.2026) நடைபெற்ற வளையாட்டரங்கு திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கோடிக்கனக்காண பணங்களை சுருட்டிக்கொண்ட அரசியல் வாதிகளிடமிருந்து அவற்றினை மீட்டு பொதுமக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்.
வீட்டுத் திட்டங்கள்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்த பெருந்தொகையான நிதி குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் அவர்களோடு இருக்கின்றவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கின்றது என்று சொல்கின்றார்கள். பல கோடிக்கணக்கான நிதி அவர்களுடைய கையகப்படுத்தப்பட்டதாகச் செய்தி வந்திருக்கின்றன.
அந்த நிதி இருக்குமாக இருந்தால் உண்மையில் பல மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம், முடிக்கப்படாமல் இருக்கின்ற பல வீட்டுத் திட்டங்களை முடிக்கலாம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை வாழ்வாதாரங்களைச் செய்துகொள்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
முடக்கப்பட்டு இருக்கின்ற அந்த நிதியை அரசாங்கம் அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து மீட்டெடுத்து மக்களின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த வேண்டும்.
அண்மையில் உதய கம்மன்பில வெளியிட்டிருந்த புத்தகத்திருந்து எங்களுக்கு விளங்குகின்ற விடயம் என்னவென்றால் முக்கியமான சூத்திரதாரிகளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது அல்லது சட்டத்தின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தக்கூடாது என்பதற்காக இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இந்த அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்ற விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக 269 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வழிபாட்டுத் தலங்களிலேயே கொல்லப்பட்டு பல நூற்றுக்கணக்கான மக்கள் காயத்துக்குள்ளாகியிருந்தனர்.
எனவே, நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவது என்பது மிகவும் கேவலமான ஒரு நிலைமை.
அதனை நிச்சயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும். அதேபோன்று கடந்த காலத்தில் எங்களுடைய மக்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டார்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்கள் என்ற ஒரு பட்டியல் இருக்கின்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இனப்பிரச்சினை தீர்ந்துவிடும்
இந்த அரசாங்கம் இனப்பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் இன்னும் கைவைக்கவில்லை. புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அதனைச் செய்து முடிக்குமாக இருந்தால் அது ஒரு சாதனையாக இருக்கும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்கின்றோம்.

இன்னும் அந்த இனப்பிரச்சினை என்பதைச் சாதாரண பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள். அது அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |