ஐந்து நாடுகளை இலக்கு வைத்து அமுல்படுத்தப்படவுள்ள திட்டம்
இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உலகின் முன்னணி நாடுகளான ஐந்து நாடுகளை இலக்காகக் கொண்டு விசேட ஊக்குவிப்புத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கஜகஸ்தான், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுற்றுலா அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் பணிப்பாளர் சபை மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மேலும் பணித்தார்.
சுற்றுலா அமைச்சின் தகவலின்படி ஜனவரி முதல் ஒக்டோபர் 24 வரை 54,768 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். செப்ரெம்பர் மாதம் 13,547 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இன்று வரை 16,451 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இந்தியா, ஐக்கிய இராச்சியம், பாகிஸ்தான், ரஷ்ய கூட்டமைப்பு, ஜேர்மனி, மாலைதீவு, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் இருந்து இந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, அந்த நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட குறுகிய கால மற்றும் நீண்ட கால ஊக்குவிப்புத் திட்டங்கள், பயண முகவர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விசேட ஊக்குவிப்புத் திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.