சர்வதேச அளவில் விரிவடையும் சபாநாயகர் விவகாரம்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
அது தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை சபாநாயகர் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டி, இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தலைவரான ரெஃபில்வே ட்ஷ்வேனி-ட்ஷிபானே மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஸ்டீவன் ட்விக் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார்.
நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை
இலங்கை நாடாளுமன்றத்தின் நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய விடயமொன்று தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சபாநாயகர் பதவியில் செயற்படுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தான் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அனுப்ப எதிர்பார்த்திருந்த போதிலும், அது தொடர்பில் தாமே ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபரே, தனக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது இயற்கை நீதியின் அடிப்படைகளுக்கு முரணானது எனவும், இது நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை குறித்து பாரிய கேள்விகளை எழுப்புவதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அதிகாரங்கள்
அத்துடன், மற்றுமொரு விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்க முயன்றபோது, சபாநாயகர் தனது உரையை இடைநிறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் 1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
மேலும், சபாநாயகரின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நடுநிலைத்தன்மைக்கு அமைவானதா என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிடம் சமர்ப்பிக்க இலங்கை நாடாளுமன்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நடுநிலையானதுமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 16 மணி நேரம் முன்