யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் மீது வாள்வெட்டு : நால்வர் அதிரடி கைது
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் வவுனியாவில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்தநிலையில் குறித்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவான நிலையில் வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர், குற்றச் செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என நால்வரே இவ்வாறாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 13 மணி நேரம் முன்