தொடருந்து சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் : பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கையில் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் வசமுள்ள தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள தொடருந்து நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து இயந்திரங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த தொடருந்து இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த தொடருந்து நேர அட்டவணையின்படி, சுமார் 450 தொடருந்து சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக தொடருந்து திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.
இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் தொடருந்து திணைக்களத்திடம் 109 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது.
தொடருந்து திணைக்களம்
இதன்படி, 3 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.
2023ஆம் ஆண்டில் தொடருந்து திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது.

இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 25 நிமிடங்கள் முன்