தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து மாயமான பறவைகள்! காவல்துறையில் முறைப்பாடு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து முப்பத்திரண்டு புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.
திருட்டு சம்பவம்
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை விலங்குகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் குறித்த புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணை
சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை என்று தெஹிவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து தெஹிவளை காவல்துறையினர் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
