தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு ( படங்கள்)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாகி பொன். சிவகுமாரனது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை ஏற்றி அகவணக்கம், மலரஞ்சலி என்பனவும் இடம்பெற்றது.
தொடர்ந்து பொன். சிவகுமாரனின் கல்லறை உள்ள இடத்திலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார்.
தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மலரஞ்சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் வகிபாகம் பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம்
வருடா வருடம் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.