பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிப்போர் : நீதி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிப்போரின், தண்டனையை தளர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சு (Ministry of Justice) அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பான பரிசீலனைக்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 வருடங்களுக்கு மேலாக தண்டனையை அனுபவிப்போர் தொடர்பில் குறித்தக் குழு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் வகையிலேயே இந்த விடயங்கள் ஆராயப்படுகின்றது.

இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 10 பேர் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
இவர்களின் தண்டனைகளை ஆராய்ந்து, விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்துரைக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமே கைதுகள் இடம்பெற்றுள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.

அத்துடன், எவரேனும் தனிநபர்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |