தடம் புரண்ட “டிக்கிரி மெனிக்கே”: மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு(படங்கள்)
நானு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் தொடருந்து தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
குறித்த தொடருந்தின் மூன்று பெட்டிகள் இன்று (21) காலை 7.15 மணியளவில், தடம் புரண்டுள்ளது.
பலத்த சேதம்
ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லூக்கு அருகில் குறித்த தொடருந்து தடம் புரண்டுள்ளது.

தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று, தொடருந்து திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் மோதியதால், கட்டிடத்திற்கும் தொடருந்து பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தொடருந்து சேவை முடக்கம்
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் தொடருந்துகள் ஹட்டன் தொடருந்து நிலையம் வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் அனைத்து தொடருந்துகளும் கொட்டகலை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தொடருந்துகளுக்கும் இடையில் அரச பேருந்துகளை கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்