காவல்துறைதுறையை புனரமைக்க வேண்டிய காலம் : எச்சரிக்கை விடுத்துள்ள மூன்றாம் கண்
காவல்துறை துறையை புனரமைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக மூன்றாம் கண் அமைப்பின் குடியியல் செயற்பாட்டாளர் சஞ்ஜீவ பிரதீப் (Sanjeeva Pradeep) தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எதிராக செயற்படும் நிலை மாறி இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் செயற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மூன்றாம் கண் என்ற குடியியல் அமைப்பு கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காவல்துறை துறையை புனரமைப்பது தொடர்பாக ஏற்கனவே கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
எனினும் அரசியல்வாதிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்துக்கொள்வதை அடிப்படையாக கொண்டு இது காலம் கடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே போக்குவரத்து காவல் துறையினர் அவ்வபோது வீதிகளில் பொதுமக்களை தாக்கும் செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கிறது.
வினோத விளையாட்டுகளில் ஈடுபடும் காவல் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் காவல்துறை அதிபர் ஆகியோர் தமது காவல் துறையினர் வைத்திருக்கும் ரி 56 ரக துப்பாகிகள் எதிராளிகளுக்கு பயன்படுத்தப்படும் என்ற நினைப்பில் இருந்தனர்.
எனினும் இன்று அந்த ரி56ரக துப்பாகிகள் காவல்துறையினருக்கு மத்தியிலே பயன்படுத்தப்பட்டு வந்தன. கடந்த காலங்களில் காவல்துறை சம்மந்தமான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படும் போது அமைச்சர் சரத் வீரசேகர உடனடியாக அறிக்கைகளை விடுத்து வந்தார்.
எனினும் திருக்கோவிலில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சரத் வீரசேகர இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவே இந்த விடயத்தில் ஒளிந்துக்கொண்டிருக்காமல் வெளியில் வர வேண்டும் என சஞ்ஜீவ பிரதீப் கோரிக்கை விடுத்தார்.
கந்தர பிரதேசத்தில் பெண் காவல்துறை அலுவலரை தொந்தரவு செய்ததாக கூறப்படும் காவல் நிலைய அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
எனினும் அவருக்கு இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரவே மீண்டும் பொறுப்பதிகாரி பதவியை பெற்றுக்கொடுத்தார் என தெரிவிக்கப்படுகிறது. இது உண்மை இல்லை எனில் காஞ்சன விஜயசேகர பகிரங்கமாக அதனை அறிவிக்க வேண்டும்.
ஏற்கனவே ஜெகத் குமார ,காமினி லொக்குகே, சனத் நிசாந்த, அருந்திக்க பெனான்டோ போன்ற அரசியல்வாதிகளும் தமக்கு தேவையான காவல்துறை அதிகாரிகளை நியமித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான நிலையில் காவல்துறை அதிபர் எதற்காக பதவியில் இருக்க வேண்டும் என சஞ்ஜீவ பிரதீப் கேள்வி எழுப்பினார். அதேநேரம் காவல்துறை ஆணைக்குழு செயற்பட முடியாமல் இருப்பதில் எவ்வித அர்த்தங்களும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில் காவல்துறை அதிபர் தமக்கு அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறினால் அதனை வெளிப்படுத்த வேண்டும். பதவி ஓய்வு பெற்ற பின்னர் அதனை கூறுவதில் எவ்வித பயனும் இல்லை. இதேவேளை தமக்கு அரசியல் அழுத்தம் இருப்பதாக காவல்துறை அதிபர் கூறினால் அரசதலைவர் உடடினடியாகவே அவரை பதவியில் இருந்து நீக்கி விடுவார். இதுவே இன்று அரசதலைவர் நடைமுறைப்படுத்தி வரும் செயற்பாடாக இருக்கிறது.
ஏற்கனவே விவசாய அமைச்சின் செயலாளர் உண்மையை கூறியதன் காரணமாகவே அவரை அரசதலைவர் பதவியில் இருந்து நீக்கினார் என்றும் மூன்றாம் கண் அமைப்பின் உறுப்பினர் சஞ்ஜீவ பிரதீப் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் திருக்கோவில் சம்பவம் ஆரம்பத்தில் விடுமுறை வழங்கப்படாததால் இடம்பெற்றதாக கூறப்பட்ட போதும் தற்போது அது அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டது என்பது தெரியவந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை எரிவாயு வெடிப்பு தொடர்பாக பிரதி காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் கூறிய கருத்துக்கள் யதார்த்தமற்றவையாகும்.
இது எரிவாயு நிறுவனங்களுக்கு சார்பாக கூறப்பட்ட கருத்தாகும் என்றும்“மூன்றாம் கண் ”அமைப்பின் உறுப்பினர் சஞ்ஜீவ பிரதீப் தெரிவித்துள்ளார்.