கோட்டாபயவுடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள்!
அரச தலைவரின் சந்திப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காகப் பேச வேண்டும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
அரச தலைவரைச் சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம்.
அதனை அவர்கள் புறக்கணிக்க வேண்டும் என கோருகிறோம். அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள இந்நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதனை விட இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி எமக்கான உரிமைகளையும், எமக்கான நீதியையும் பெற அவர்கள் அணிதிரள வேண்டும்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரச தலைவருடனான பேச்சுக்களைப் புறக்கணிக்க வேண்டும்.
பேச்சுக்கு செல்வார்கள் ஆயின் அது எமக்கு இழைக்கப்படும் அநீதி மாத்திரமல்ல, துரோகமும் கூட என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
