கலையரசனை கடுமையாகச் சாடிய பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேசுவதில்லை. வெறுமனே அரசாங்கத்தை மாத்திரம் விமர்ச்சித்து தனது பதவிக்காலத்தை வீணடித்து வருகின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இப்பகுதியில் பல தமிழ் தேசிய கூட்டமைப்புப் பல நாடாளுமன்ற பலரை இருந்துள்ளனர். ஆனால் இவரை போன்ற சோம்பேறித்தனமான நபர்களை காண முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் அண்மைக்கால பேச்சுக்களில் சொல்லாடல்கள் குறித்து தெளிவில்லை. நாடாளுமன்றத்தில் அதிக நேரம் பேசியதாகவும் அறியவில்லை. அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேறு சில அரசியல் காரணங்களுக்காக தேசிய பட்டியல் பதவியை வழங்கி அம்பாறை மாவட்டத்தில் வைத்திருக்கலாம்.
அதன் நன்றிக் கடனாக அரசாங்கத்தை விமர்சிக்கின்ற நிலைமை அவருக்கு இருக்கலாம் என நினைக்கின்றேன். எமது அரசாங்கம் நேர்த்தியான பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்றது. நாட்டில் தற்போது ஒரு இக்கட்டான நிலைமையை சந்தித்துள்ளோம்.
இக்கட்டான சூழலிலும் அரசியல் காரணங்களுக்காக பலரும் விமர்சித்து வருகின்றார்கள். கூட்டமைப்பினர் அம்பாறையில் இழந்த செல்வாக்கினை சரி செய்வதற்காக தேசிய பட்டியலை பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கலையரசன் பேசுவதில்லை. வெறுமனே அரசாங்கத்தை மாத்திரம் விமர்ச்சித்து தனது பதவிக்காலத்தை வீணடித்து வருகின்றார்.
கடந்த காலங்களில் இப்பகுதியில் பல தமிழ் தேசிய கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இருந்துள்ளனர். ஆனால் இவரை போன்ற சோம்பேறித்தனமான நபர்களை காண முடியவில்லை என தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பல பிளவுகள் உள்ளதாக ஊடகங்கள் பல கூறுகின்றன. இவ்விடயம் தொடர்பில் நாம் நிராகரிக்கின்றோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. நாங்கள் கட்டுக்கோப்பாக இருப்பதனால் எம்மை எவராலும் பிரிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.