இலங்கைக்கு இந்த மாதம் அதிக அளவில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் நாடு எது தெரியுமா!
இந்த வருட டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சுமார் 4,418,255 பேர் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்
இது தவிர, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நாடுகளின் பட்டியலில் இந்தியா, பிரித்தானியா, போலந்து, சீனா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளடங்குகின்றன.
இதேவேளை,குறுகிய காலத்தில் 8,500 மில்லியன் டொலர் சுற்றுலா வருமானத்தை ஈட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “க்ளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் இலங்கையை மாற்றியமைக்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றும் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பணிகள் தற்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ளன.
சுற்றுலாத்துறை வருமானம்
குறுகிய காலத்தில் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்து, அதனூடாக 8,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
எனவே, 2025 ஆம் ஆண்டு வணிக ரீதியில் சுற்றுலாத்துறைக்கு ஒரு முக்கிய ஆண்டாகும்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் துரிதப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், சுற்றுலா வலயங்களின் சுகாதார தேவை தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்குத் தனியார் துறையின் பங்களிப்பையும் எதிர்பார்த்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |