இனத்திற்காக வெடித்து காற்றிலும் கடலிலும் நிலத்திலும் கரைந்தவர்கள்…
ஜூலை 5 ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஒரு இனத்தின் வரலாற்றை தியாகங்களின் வழக்கமான அளவுகோல்களால் அளக்கப்பட முடியாது.
அவை எல்லைகளை மீறியவையும் கடந்தவையுமாகும். உயிர் மீது மனிதனுக்கு இருக்கும் இயல்பான பற்றுதலையே கடந்து, ஒரு இலட்சியத்திற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்த தருணங்கள் மகத்துவமானவை.
அந்தத் தியாகங்கள் வெறும் போரியல் நிகழ்வுகள் மாத்திரமல்ல. ஒரு இன மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத நினைவுகளாகவும், மனச்சாட்சியாகவும் உயிராயுதமாகவும் வாழ்கின்றன.
இனத்திற்காக வாழ்தல்
ஒரு மனிதன் தனது உயிரை நேசிப்பது இயற்கையானது. வாழ வேண்டும் என்பதே மனித வாழ்வின் முதன்மை விருப்பம்.
ஆனால் சில காலங்கள் அந்த இயற்கையையே தலைகீழாக மாற்றிவிடுகின்றன.
ஒரு மக்களின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அவர்களின் மொழி, நிலம், அரசியல் உரிமைகள், வாழ்வுரிமை அனைத்தும் மறுக்கப்படுகையில், சிலர் தமது தனிப்பட்ட வாழ்வை விட தமது மக்களின் எதிர்காலத்தைப் பெரியதாகக் கருதுகின்றனர்.
அப்போது இலட்சியத்திற்காக வாழ்தல் அறமாகிறது. அத்தகைய வரலாற்றுச் சூழல்களில்தான் எல்லைகளை மீறிய தியாகங்கள் உருவாகின்றன.
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாறு அப்படிப்பட்ட தியாகங்களால் நிரம்பியுள்ளது. முன்பொரு காலத்தில் எங்கள் நிலத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய இளைஞர்கள் இருந்தனர்.
குடும்பத்தின் அன்பையும் எதிர்காலத்தின் கனவுகளையும் பின்னால் விட்டுச் சென்றவர்கள் இருந்தனர்.
அவர்கள் வாழ்க்கையை முழுமையாக இனத்தின் அரசியல் இலட்சியத்திற்கு ஒப்படைத்தனர். அவர்களது வாழ்வின் அளவுகோல் தனிப்பட்ட வெற்றியோ தோல்வியோ இல்லை. தாம் நம்பிய மக்களின் விடுதலையே.
தியாகத்தின் பொறுப்புணர்வு
தன்னைவிட பெரிய ஒன்றுக்காக தன்னை ஒப்படைப்பது தியாகம். அந்த ஒப்படைப்பின் உச்ச வடிவங்களில் ஒன்றாகவே தம் உயிரையே அர்ப்பணித்தவர்களின் வரலாறு நிற்கிறது.
அந்த வரலாற்றை ஒவ்வொருவரும் வெவ்வேறு அரசியல் பார்வைகளில் வாசிக்கலாம். ஆனால் அந்த முடிவுகளுக்குப் பின்னால் இருந்த அர்ப்பணிப்பையும், தமது மக்களின் எதிர்காலம் மீதான தீவிர நம்பிக்கையையும் வரலாற்றிலிருந்து நீக்க முடியாது.
இன்று நாம் நினைவுகூருவது அப்படியொரு நாளின் நினைவுகளையே. ஒரு தலைமுறையின் பொறுப்புணர்வை நினைவுகூருகிறோம்.
தமக்காக வாழாமல் தம் இனத்திற்காக தம்மை வெடித்து காற்றிலும் கடலிலும் கரைத்தவர்களை நினைவுகூருகிறோம். இந்த நினைவுகள் வெறுமனே போரின் நினைவுகள் மாத்திரமல்ல. அவை அன்பின் நினைவுகளாகவும் எம் மண்ணில் கனத்துள்ளன.
ஒரு தாய் தனது மகனை இழந்த நினைவு. ஒரு சகோதரி தனது அண்ணனை இழந்த நினைவு. ஒரு மனைவி தனது துணையை இழந்த நினைவு.
ஒரு குழந்தை தனது தந்தையின் முகத்தை புகைப்படங்களில் மட்டுமே அறிந்துகொண்ட நினைவு. தேச விடுதலைக்காக இன்னமும் திரும்பாத பயணங்களை மேற்கொண்டவர்களின் நினைவில் உழலும் அவர்தம் சொந்தகளின் துயரத்தையும் இந் நாள் சுமந்திருக்கிறது.
இன்னும் அவர்கள் போராடுகின்றனர்
அவர்கள் காற்றிலும் நிலத்திலும் கடலிலும் கரைந்து கலந்தவர்கள்தானே. அதனால்தான் இன்று ஈழத்தின் நிலம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது.
புதைகுழிகளில் இருந்து எலும்புக்கூடுகள் எழுந்து போராடுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் வீதிகளில் நீதியைத் தேடுகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் மக்களை எதிர்நோக்கிக் கிடக்கின்றன. போராடுகின்ற வல்லமையை வழியை அவர்கள் தருகின்றனர்.
இந்த யதார்த்தங்களின் மத்தியில், கடந்த தியாகங்களை நினைவுகூர்வது என்பது கடந்த காலத்தின் நினைவில் மூழகுவதல்ல.
இன்னும் நிறைவேறாத நீதியியைப் பெறும் போராட்டமாகும். ஒரு மக்களின் நினைவுகளை அழிப்பதே அவர்களை வரலாறற்றவர்களாக மாற்றுவதற்கான முதல் முயற்சியாகும். நினைவிடங்களை இடிக்கலாம்.
நினைவேந்தல்களைத் தடுக்கலாம். வரலாற்றுப் பதிவுகளைப் பறிமுதல் செய்யலாம். அதையே இலங்கையில் அரசு ஈழத் தமிழ் மக்கள்மீதும் அவர்களின் போராட்டம்மீதும் மேற்கொண்டது.
ஆனால் மக்களின் மனங்களில் வாழும் நினைவுகளை எந்த அதிகாரமும் பறிமுதல் செய்ய முடியாது. ஏனெனில் நினைவுகள் நிலத்தில் மாத்திரமின்றி, மனிதர்களின் உள்ளங்களிலும் வேர்விட்டிருக்கிறது.
இன்றும் ஈழ விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களால் தம்முயிரை தந்தவர்களை நினைவுகொள்ள முடியாத அடக்குமுறைச் சூழல் எம்மை சிறையிட்டிருக்கிறது.
ஏன் இந்த நினைவுகூர்தல்கள்?
எல்லைகளை மீறிய இத் தியாகங்களை நினைவுகூர்வது மீண்டும் நாம் உடலில் வெடிபொருட்களை சுமந்து வெடிப்பதற்கல்ல.
ஆனால் ஏன் இந்த நிலைமை வந்த்து? என்பதை வரலாறு அறிய வேண்டும். தலைமுறைகள் உணர வேண்டும்.
மனிதர்கள் எந்த அரசியல், சமூக, வரலாற்றுச் சூழ்நிலைகளில் இத்தகைய உச்சமான முடிவுகளை எடுக்க நேரிட்டது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது.
ஒரு சமூகத்தை அத்தகைய எல்லைகளுக்குத் தள்ளிய காரணிகளை வரலாற்றின் முன் நிறுத்துவதற்காகவே இந்த நினைவேந்தல்கள். அத்தகைய துயரங்கள் இனி எந்த மக்களுக்கும் நிகழக்கூடாது என்பதையே உலகுக்கு இந்தநாள் நினைவூட்டுகிறது.
நினைவுகளைப் பாதுகாப்பது ஒரு மக்களின் உரிமை. தியாகங்களை நினைவுகூர்வது அவர்களின் வரலாற்று உரிமை. அந்த உரிமையை எந்தச் சட்டமும் பறிக்க முடியாது. ஏனெனில் நினைவுகள் என்பது கடந்த காலத்தின் எச்சங்கள் மாத்திரமின்றி, ஒரு மக்களின் எதிர்காலத்தை உருவாக்கும் மனச்சாட்சியும் ஆகும்.
எல்லைகளை மீறிய தியாகங்கள் காலத்தைத் தாண்டி வாழ்கின்றன. அவை கல்லறைகளில் மட்டும் உறங்குவதில்லை.
அவை நீதியை எதிர்நோக்கும் ஒவ்வொரு கண்களிலும், தாய்மொழியைத் தாங்கும் ஒவ்வொரு இதயத்திலும், சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ந்து உயிர்ப்புடன் வாழ்கின்றன. அந்த நினைவுகள் மறக்கப்படாதவரை, ஒரு மக்களின் வரலாறும் மறையாது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.