அலுவலக நேரத்தை பொறுத்தே மீண்டும் புகையிரத சேவை
அரச மற்றும் தனியார் துறையினர் பணிக்கு வரும் மற்றும் பணி நிறைவு பெறும் நேரங்களை மாற்றியமைத்தால் அலுவலக புகையிரத சேவையை சமூக இடைவெளிக்கு அமைய மீள ஆரம்பிக்க முடியும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர (Thammika Jayasundara) தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பொதுத்துறை நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காலை மற்றும் மாலை புகையிரத சேவையில் நிலவும் சன நெரிசலை கட்டுப்படுத்தும் யோசனையை முன்வைப்பதற்கும், புகையிரத பாதைகளை திருத்துவதற்கும், புகையிரத பெட்டிகள் கிருமி தொற்று நீக்கல் செய்யும் பணிகளுக்காக புகையிரத சேவை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான யோசனையை இந்த இரண்டு வார காலத்திற்குள் முன்வைக்குமாறு போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது என்றார்.