வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வைத்துப் பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் - சத்தியமூர்த்தி
வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வைத்துப் பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்..
போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு

கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. எனினும் இப்போது போதைப் பொருள் சம்பந்தமாக ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்ற போது அங்கு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இருப்பினும் முற்று முழுதாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரிக்கும் நிலையம் வடபகுதியில் இன்னும் அமைக்கப்படவில்லை.
வடக்கு மாகாண ஆளுநரும் கரிசனை

அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின் அதற்கு பல்வேறுபட்ட வசதிகளையும் செய்தாக வேண்டியுள்ளது. வடக்கு மாகாண ஆளுநரும் இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டு பல முயற்சிகளை எடுத்திருக்கின்றார்.
அதேநேரத்தில் புதிதாக ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருப்பதை அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.