புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான நபர் இனந்தெரியாதோரால் ஆயுத முனையில் கடத்தல்!
திருகோணமலையில் இனம் தெரியாத நபர்களால் ஆயுத முனையில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவரே திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து இனம்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் செல்வதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து உப்புவெளி காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது அவ்வாறன நடவடிக்கை தமது காவல் நிலையத்தின் எந்தவொரு அதிகாரிகளாலும் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் முறையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவரது மனைவி மற்றும் தாயார்,
கடத்தப்பட்ட நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி பல வருடங்களாக சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வந்ததாகவும் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தமக்கு தெரியாத நிலையில் அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவி கோருவதாகவும் தெரிவித்தனர்.