மூதூர் பிரதேசத்தில் மீண்டும் கொரோனா அச்சம்- உடன் அமுலாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு மூதுார் சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தீர்மானங்களுக்கு பொதுமக்கள் பரிபூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பிரதேச செயலகமும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
1 அனைத்து மதஸ்தலங்களும் உடனடியாக மூடப்படும்.
2 வீடுகளில் கூட்டாக நடாத்தப்படும் அனைத்து வணக்கவழிபாடுக்கும் தடை.
3 அத்தியவசிய தேவைகளுடைய பார்மஸி. குரோஸரி, மீன் மற்றும் இறைச்சிக்கடை மற்றும் மரக்கறிக்கடைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்படும். அவ்வாறு திறக்கப்படும் கடைகள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் . மீறுபவர்களது கடைகளும் உடனடியாக மூடப்படும்.
4 வீடுகளில் மேற்கொள்ளப்படும் வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது கண்டறியப்பட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் .
5 வெளியூர்களுக்கு செல்வதற்கு முற்றாக தடை , அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதியினைப் பெற்றுச் செல்ல முடியும் .
6 அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் 50 வீதமானோர் மட்டுமே பயணம் செய்ய முடியும் அத்தியவசிய தேவைகளுக்கான அலுவலகங்கள் தவிர மற்றைய அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் .
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு பொது அறிவித்தல் ஒன்றினை மூதுார் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.