திருகோணமலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா
திருகோணமலையில் 18 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலைபிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது - திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஜமாலியா,லவ்லேன், சிறிமாபுர பகுதிகளில் கடந்த 30 ஆம் திகதி 42 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவருக்கும்,மேலதிகமாக திருகோணமலை நகரில் ஏழு தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 3 பெண்கள் உட்பட இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை திருகோணமலை சிறிமாபுர பகுதியில் 93 பேருக்கு இன்று (03) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் நான்கு பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இன்று மொத்தமாக 18 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 148 பேர் இதுவரை தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.