சர்வதேச மத்தியஸ்தத்துடன் சமூக ஒப்பந்தம்: திருகோணமலைப் பிரகடனம் வெளியீடு
திருகோணமலை – 2026 ஆம் ஆண்டுக்கான “திருகோணமலைப் பிரகடன” முன்வரைவு, சர்வதேச மத்தியஸ்தத்துடனும் உத்தரவாதத்துடனும் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றம் எனப்படும் புதிய குடிசார் சமூக அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பக்கப் பிரகடன முன்வரைவு, பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை முரசறையிடப்பட்டது.
இதில், உள்நாட்டில் நடைபெறும் அரசியலமைப்புத் தயாரிப்பு முயற்சிகளில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு காலத்தை விரயமாக்குவதற்குப் பதிலாக, ஈழத்தமிழரின் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பாற்பட்ட எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றிய சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதி
இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம், இலங்கைத் தீவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களுக்கும் மக்கள்களுக்கும் இடையே அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தச் சமன்பாட்டை எட்ட முடியுமா என்பதை ஆராய்வதாகும்.
அத்தகைய சமூக ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே தென்னிலங்கைத் தரப்புகளிடம் அரசியலமைப்புக்கான வரைவை முன்வைத்து, அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு தயாரிப்பு பயிற்சிகளில் ஈடுபடுவது பயனளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாறாக, மீண்டும் மீண்டும் அரசியலமைப்பு மாதிரிகளை எழுத முனைவது வெளியக சர்வதேச நீதியை நீர்த்துப் போகச் செய்து, உள்ளகப் பொறிமுறை என்ற பெயரில் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இழுத்தடிக்க தென்னிலங்கைச் சக்திகளுக்கு வாய்ப்பளிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்வரைவு, திருகோணமலை ஆயர், தென்கயிலை ஆதீனம், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பல பேராளர்களின் பங்கேற்போடு உருவாக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மற்றும் சர்வதேச சட்ட மொழிநடையில் ஆங்கிலத்தில் பல நிபுணர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டுள்ள 2026 திருகோணமலைப் பிரகடனம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத் தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கும் பண்பையும் வலியுறுத்தும் வகையில், குறித்த முன்வரைவு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கை
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை ஈழத்தமிழர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து முன்வரைவைக் கூடுதல் மெருகூட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த அரசியல் சமூக செயற்பாட்டாளரும் பன்னாட்டு நீதி குறித்த நூலாசிரியருமான சிறீஞானேஸ்வரன், இந்த முயற்சி எந்தவித வெளிநாட்டு நிதியுதவியோ தன்னார்வ அமைப்புகளின் தாக்கமோ இன்றி, ஈழத்தமிழர்களால் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சர்வதேச நீதிக்கான வழிவரைபடம் தொடர்பான நிலைப்பாடு தயாரிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்நிலைப்படையில் ஆறாம் சட்டத்திருத்தத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஐம்பது பேர் இந்த முயற்சியில் பங்குபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



