மோசடி வழக்கில் கைதான ட்ரம்ப் பிணையில் விடுதலை
அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோர்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை சட்டவிரோதமாக மாற்றியமைக்க திட்டமிட்டதாகமுன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. இதனால், 19 பேரையும் கைது செய்ய நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. இதன்போது ட்ரம்ப் சரணடைய போவதாக அறிவித்திருந்தார்.
2 இலட்சம் பிணையில்

இந்த வழக்கில், ஜோர்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா சிறையில் கடந்த 24ஆம் திகதி இரவு 7 மணியளவில்( அமெரிக்க நேரப்படி) ட்ரம்ப் சரணடைந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிறைச்சலை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். இதனால், 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் 2 இலட்சம் அமெரிக்க டொலர் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் கூறுகையில், ”இங்கு நீதியைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர். நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை. அடுத்தாண்டு நடக்கும் தேர்தலிலும் முறைகேடு செய்யவே இப்படிச் செய்கிறார்கள். என்ன நடந்தாலும் நான் வெற்றி பெறுவது உறுதி” எனக் கூறியுள்ளார்.