ஈரானில் ஆட்சி மாற்றமா..! மாற்றி பேசத் தொடங்கிய ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான 12 நாள்களுக்குப்பிறகு, ஜூன் 24 ஆம் திகதி இருநாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளன.
இந்த நிலையில், முன்னதாக, ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையென ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவு செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ளார்.
பதற்றங்கள் உருவாகும் அபாயம்
நேட்டோ உச்சிமாநாட்டுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது தற்போது தேவையில்லை. அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். திடீர் ஆட்சி மாற்றம் காரணமாக மேலும் பதற்றங்கள் உருவாகக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "கமேனியைக் கொன்றால்தான் இந்தப் போர் முடியும் என்று கூற, அதற்கு அமெரிக்க ஜனாதிபதியும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருந்திருந்தார்.
முக்கிய நோக்கம்
ஆனால் தற்போதைய நிலைமையில், ட்ரம்பின் இந்த புதிய பேச்சு, ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவின் நிலைமையை மீளப்பரிசீலனை செய்யும் ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரும், “இது ஆட்சி மாற்றத்தைப்பற்றி அல்ல, முக்கிய நோக்கம் நிலைத்த அமைதி ஏற்படுத்துவது” என வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், ஈரான், அணுசக்தி திட்டங்களை மறுசீரமைக்க முயற்சித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றிய அமெரிக்கக் கண்ணோட்டம் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
