தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது என்ற முழக்கத்துடன் ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், எட்டப்பட்டுள்ள உண்மையான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஈரானுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்கக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் இராணுவ வீரர்கள் முழு ஆயுத பலத்துடன் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள்
ஏற்கனவே நலிவடைந்துள்ள எதிரியைச் சட்டரீதியாகத் தண்டிக்கவும் மற்றும் தேவைப்படின் அழிக்கவும் அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருப்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒப்பந்தத்தின் விதிகளை யாராவது மீறினால் அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும் அதன் பிறகு ஆரம்பிக்கப்படும் துப்பாக்கிச் சூடு இதுவரை உலகம் பார்த்திராத அளவுக்கு மிகப் பெரியதாகவும் மற்றும் வலிமையானதாகவும் இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதும் உலக வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாகத் திறந்திருக்க வேண்டும் என்பதும் நீண்ட காலத்திற்கு முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இடைக்காலப் போர்நிறுத்தக் காலத்தில் அமெரிக்க இராணுவம் தனது ஆயுதங்களை ஏற்றிக்கொண்டும் போதிய ஓய்வெடுத்துக்கொண்டும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்த ட்ரம்ப், தனது படைகள் அடுத்த வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து போலி வாதங்களையும் நிராகரித்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |