பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்
இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் காயமின்றி தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வொஷிங்டனில் உள்ள 'வொஷிங்டன் ஹில்டன்' ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு என சந்தேகிக்கப்படும் பலத்த சத்தங்கள் கேட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரையில் விழுந்து பாதுகாப்பு
மண்டபத்திற்குள் "பெரிய சத்தம்" அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர்.

இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியா ட்ரம்பையும் பிரதான மேடையிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவி வெய்ஜியா ஜியாங், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு மீண்டும் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையைப் பாராட்டியதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 30 வயது ஆண் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்