இஸ்ரேலுக்கு நேரடி எச்சரிக்கை: ஆத்திரத்தில் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு நேரடியாக கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்தித்திற்கு பிறகு ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலும் கடுமையான தாக்குதலை நடத்தும் என அறிவித்ததை தொடர்ந்து ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
போர்நிறுத்தம்
அதன்போது, ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல்! அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் அப்படி செய்தால், அது ஒரு பெரும் ஒப்பந்த மீறலாகும். உங்கள் விமானிகளை உடனடியாக திரும்ப அழைத்துவருங்கள்!” என கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் நடத்திய இடைமுகப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், இந்த போர்நிறுத்தம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், ட்ரம்ப் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கை, அமெரிக்கா இப்போது போர்நிறுத்தத்தை மீறுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் கண்டிப்பாக எதிர்க்கும் நிலையிலுள்ளதை காட்டுகிறது.
ட்ரம்பின் எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், போர்நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட பிறகு ஈரானில் இருந்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குற்றஞ்சாட்டியது.
அதனைதொடர்ந்து, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள அரசு இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் மூலம் பதிலளிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டதாக அறிவித்தார்.
பின்னர் தணிந்து வந்த மத்திய கிழக்கு மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இஸ்ரேல் அவ்வாறான தாக்குதலை நடத்தக் கூடாது என்றும், விமானிகளை உடனடியாக திரும்ப அழைக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
