ஈரானில் இணைய தடையை உடைக்க மஸ்க்கை களமிறக்கும் ட்ரம்ப்!
ஈரானில் முடக்கப்பட்டுள்ள இணையச் சேவையை மீண்டும் வழங்குவதற்காக எலோன் மஸ்கின் தொழில்நுட்ப உதவியை நாட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
ஈரானின் பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனை ஒடுக்கவும் மற்றும் போராட்டங்கள் குறித்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களுக்குக் கசிவதைத் தவிர்க்கவும் ஈரானிய அரசாங்கம் நாடு முழுவதும் இணையச் சேவையைத் துண்டித்துள்ளது.
போராட்டக்காரர்கள்
இதனால் போராட்டக்காரர்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பது குறித்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

எலோன் மஸ்க்கின் தொழில்நுட்பத் திறமையைப் பாராட்டியுள்ள ட்ரம்ப், இணையச் சிக்கல்களைக் கையாள்வதில் அவர் மிகவும் திறமையானவர் என குறிப்பிட்டுள்ளார்.
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை மூலம் ஈரானில் இணையத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஈரானிய அரசின் தணிக்கைத் தடையை மீறி மக்கள் தடையற்ற இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
இணையச் சேவை மீண்டும் கிடைப்பது ஈரானியப் போராட்டக்காரர்களின் குரலை உலகிற்கு உரக்கச் சொல்லவும் மற்றும் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |