சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!
ஈரான் விவகாரத்தில் தனது நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஊடகங்கள் விமர்சன ரீதியாக அணுகுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய செய்தி நிறுவனங்களைச் சாடி அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறிப்பாக இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தன் மீது குறை காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம்
ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை எட்டியுள்ள போதிலும், ஊடகங்கள் அதனைப் பாராட்டத் தவறுவதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இத்துடன் குறித்த நிறுவனங்கள் தன்னைக் குறை கூற ஒரு காரணத்தைத் தீவிரமாகத் தேடியும், எதையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாக அவர் எள்ளி நகையாடியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தை
ஈரான் கொள்கையில் தான் அடைந்துள்ள முன்னேற்றங்களை அங்கீகரித்து மிஸ்டர் பிரசிடெண்ட், மிகச் சிறந்த பணி (Job Well Done, Mr. President) என்று ஊடகங்கள் கூற முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலமே அந்த ஊடகங்கள் இழந்த தங்களது நம்பகத்தன்மையை மீண்டும் பெற முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில் ஊடகங்கள் இது தொடர்பாக முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்த செய்திகள் அவரைப் பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளதையே ட்ரம்பின் இந்தப் புதிய தாக்குதல் வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |