தமிழ், முஸ்லிம் உறவில் திருப்பம் : சாணக்கியனது முயற்சிக்கு பாராட்டு
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) முஸ்லிம் சமூகத்திற்காகவும் குரல்கொடுப்பது தமிழ் முஸ்லிம் உறவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என தான் உறுதியாக நம்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளருமான எம்.எஸ். சுபைர் (M.S.Subair) தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எடுத்துவரும் முயற்சிகளையும் அவரது நல்ல சிந்தனைகளையும் நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.
அவர் முஸ்லிம் சமூகத்திற்காகவும் குரல் கொடுப்பதால், குறுகிய மனமுள்ள சிலர் அவரது போக்கை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள், அது வருத்தமளிக்கின்றது.
அவரைப் போன்றே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்” என்றார்.