முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் மாயம்
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இன்று கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை
நேற்று (02.05.2026) காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு கடற்றொழிலாளர்களும், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலையாவது கரை திரும்பியிருக்க வேண்டும்.
தேடியும் கிடைக்காத கடற்றொழிலாளர்கள்
ஆனாலும் நீண்ட நேரமாகியும் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் படகும் கரை திரும்பவில்லை. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் சக கடற்றொழிலாளர்கள் இணைந்து இன்று மாலை வரை நான்கு படகுகளில் சென்று தேடியும் அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

காணாமல் போன கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகினையும் தேடும் நோக்கில், முல்லைத்தீவு கடற்பரப்பில் நாளை காலை கடற்றொழிலாளர்கள் பல படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இவ்விடயம் தொடர்பாக கடற்படையினர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |