செம்மணி புதைகுழி தமிழினப் படுகொலையின் அப்பட்டமான சாட்சி: உமா குமாரன் அதிரடி அறிக்கை
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் (Uma Kumaran MP) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் படுகொலை நடந்து 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தமிழ் மக்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இராணுவப் போரின் இறுதி நிலைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் உயிர் தப்பியவர்களினதும் வலியும் துயரமும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்களின் நினைவுகளில் இன்றும் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எலும்புக்கூடுகள்
தற்போது செம்மணி - சித்துப்பாத்தி (Chemmani-Siththupaththi) பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வரும் மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதநேயத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களை உலகிற்கு மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக நினைவூட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும் போதும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கான எமது குரல் மேலும் வலுவடைந்து கொண்டே செல்லும் என அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள்
உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டால் மட்டுமே நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்றும் ஆனால் இலங்கையில் இன்றும் மௌனமும் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் நிலையும் நீடிப்பதாக அவர் சாடியுள்ளார்.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் நீதிக்காக ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர், உயிர் தப்பியவர்களின் கதைகள் மௌனிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் உண்மைக்காகவும் நீதிக்காகவும் தனது நாடாளுமன்ற அதிகாரத்தையும் குரலையும் தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், இறந்தவர்களால் நீதிக்காகக் குரல் எழுப்ப முடியாது, அவர்களுக்காகக் குரல் கொடுப்பது வாழ்பவர்களின் கடமையாகும் என உமா குமாரன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |