ருவாண்டா அகதிகள் ஒப்பந்த வழக்கில் பிரித்தானியாவிற்கு கிடைத்த வெற்றி!
இரத்து செய்யப்பட்ட அகதிகள் புகலிட ஒப்பந்தம் தொடர்பாகப் பிரித்தானிய அரசு ருவாண்டாவிற்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக வழங்கத் தேவையில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற கீர் ஸ்டார்மர், அதற்கு முந்தைய கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ருவாண்டா அகதிகள் திட்டத்தை இரத்து செய்தார்.
மில்லியன் பவுண்டுகள்
இத்திட்டத்தின்படி, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைப் பராமரிக்க ருவாண்டாவிற்குப் பிரித்தானியா பணம் செலுத்த வேண்டும்.

இந்த ஒப்பந்தம் திடீரென இரத்து செய்யப்பட்டதால் தங்களுக்குக் குறைந்தது 60 மில்லியன் பவுண்டுகள் (80 மில்லியன் டொலர்) இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று ருவாண்டா கோரியிருந்தது.
இருப்பினும் மூன்று நீதிபதிகள் கொண்ட நடுவர் மன்ற அமர்வு இந்த நிதியுதவிக் கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.
இராஜதந்திர குறிப்புகள்
கடந்த 2024 நவம்பரில் இருநாடுகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட இராஜதந்திர குறிப்புகளின்படி 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளின் ஏப்ரல் மாதங்களில் பிரித்தானியா வழங்கவிருந்த கூடுதல் தொகைகளைக் கோர மாட்டோம் என்று ருவாண்டா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் ருவாண்டாவின் தலையீடு இருப்பதாகக் கூறி கடந்த ஆண்டு லண்டன் தனது நிதியுதவிகளை நிறுத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஏற்கனவே கசப்படைந்தது.
இந்தச் சூழலில் இரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிரித்தானியா பணம் தரத் தேவையில்லை என்ற நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ருவாண்டாவிற்குப் பின்னடைவாகவும் பிரித்தானிய அரசுக்குப் பெரும் நிதியுதவிப் பக்கபலமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |