மிக மோசமான தோல்வியை எதிர் கொள்ளுமா ரஷ்யா? உக்ரைனின் உக்கிர தாக்குதல்- சுற்றிவளைக்கப்படவுள்ள ரஷ்ய படைகள்!
உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற்றி வளைக்கப்படும் அபாயத்துக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யப் படைகளை உக்ரைன் படைகள் உக்கிரமாகத் திருப்பித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் தலைநர் கீவ்க்கு மேற்கே உள்ள Makariv மற்றும் Moschun என்னும் இரு நகரங்களை உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளிடமிருந்து மீட்டிருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்படி அந்த நகரங்கள் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டிருக்குமானால், ஏற்கனவே Bucha மற்றும் Irpin நகரங்களுக்குள் ஊடுருவி, அங்கு முகாமிட்டிருக்கும் ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே உக்ரைனைச் சுற்றி வளைக்க வந்த ரஷ்யப் படைகள் தாங்களே உக்ரைன் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதால், அவர்களால் இனி உணவு, ஆயுதம் என்பவற்றை ரஷ்ய தரப்பிடமிருந்து பெற முடியாது.
ஆகவே, சரணடைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அப்படி அவர்கள் சரணடையும் பட்சத்தில், அது ரஷ்ய இராணுவம் சந்திக்கும் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய டாங்கி ஒன்றை உக்ரைன் படைகள் ஏவுகணை மூலம் சின்னாபின்னமாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், Berdyansk நகரிலுள்ள துறைமுகத்தில், ரஷ்ய கப்பல் ஒன்று உக்ரைன் தாக்குதலில் வெடித்துச் சிதறும் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது.
கீவ்க்கு மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடுமையாக சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு வந்த உக்ரைன் படைகள், இழந்த நகரங்களை மீட்கும் முயற்சியாக இப்போது திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.