உக்ரைனில் பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள்- ரஷ்யா அம்பலப்படுத்திய தகவல்!
இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக உக்ரைன் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்களின் பெரும்பாலானவர்களை உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர் என ரஷ்ய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பெரும்பாலானவர்களை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ரஷ்ய இராணுவத்தினர் தயாராக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய பிரதேசத்தில் இருந்து தமது சொந்த இராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும் தயாராக உள்ளோம் எனவும் ரஷ்ய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம், இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு ரஷ்ய இராணுவம் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தினர் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
