எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!
பாலியல் குற்றவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் நிபுணர்கள் குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெரும் பணக்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 35 லட்சப் பக்கங்கள் கொண்ட கோப்புகளை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டது.
பாலியல் சித்திரவதைகள்
இந்தக் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக ஆய்வு செய்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்தப் பாலியல் சித்திரவதைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணை
இவ்வளவு காலமாக இத்தகைய கொடூரங்கள் எவ்வாறு மறைக்கப்பட்டன என்பது குறித்துச் சுயாதீனமான விசாரணை தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் பதவி விலகுவது மட்டும் போதுமானதல்ல எனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களோ அல்லது சக்திவாய்ந்தவர்களோ யாரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. குழு, அனைத்து தேசிய மற்றும் சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்தக் குற்றங்களுக்கு எதிராக உரிய வழக்குகள் தொடரப்பட்டு, அரசுகள் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |